
தேர்தல் வழக்கு
பீகாரின் கத்திஹார் மாவட்டத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி நவ்ஜோத் சிங் சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. அது தொடர்பாக பெயில் பான்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்க பீகார் காவல்துறை கடந்த ஓராண்டில் பல முறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை.

ஜூன் 18 முதல்..
விடாமுயற்சியாக கடந்த ஜூன் 18 அன்று அவரது வீட்டு வாசலில் அவரைக் கண்டு கையெழுத்து வாங்க வந்துள்ளனர் பீகார் காவல்துறையினர். ஆனால், நவ்ஜோத் சிங் சித்துவின் உதவியாளர்கள் அவர்களை காத்திருக்குமாறு கூறி விட்டதாக கூறப்படுகிறது.

காத்திருக்க வைத்துள்ளனர்
இதுபற்றி பீகார் காவல்துறையை சேர்ந்த ஜனார்தன் ராம் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் பெயில் பான்ட்டில் கையெழுத்து வாங்கும் போதும் அவர் சிக்காமல் இருந்து வருகிறார். இந்த முறையும் கூட அவரை காண முயன்றோம். அவரது தனி உதவியாளர்கள் எங்களை காத்திருக்க வைத்துள்ளனர்" என்றார்.

வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை
நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாபின் அம்ரிட்ஸர் நகரில் வசித்து வருகிறார். வெளிமாநிலம் என்பதால் பீகார் காவல்துறையால் அனுமதி இன்றி வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், உள்ளூர் காவல்துறை உதவியை நாடலாம்.

அணுகவில்லை
பஞ்சாப் காவல்துறை தங்களை பீகார் காவல்துறையினர் அணுகவில்லை என கூறி உள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறை தாங்கள் வரும்போதும் உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடி, அவர்களுடன் தான் சித்துவின் இல்லத்திற்கு வருவதாக கூறினார் ஜனார்த்தன் ராம்.

உதவ வேண்டும்
நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த நடவடிக்கை விமர்சனத்தை சந்தித்துள்ளது. ட்விட்டரில் சிலர் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். சிலர் உள்ளூர் காவல்துறை கையெழுத்து வாங்க உதவ வேண்டும் எனவும் கூறி உள்ளனர். பீகார் காவல்துறை காத்திருக்கும் காட்சிகள் பரிதாபமாக உள்ளது என்வும் சிலர் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











