ராஞ்சி: விஜய் ஹசாரே கோப்பையில் இன்று அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை பிஹார் அணி படைத்திருக்கிறது.
இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. இதனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் அணி முறியடித்திருக்கிறது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் 14 வயது வீரரான வைபவ சூர்யவன்சி பட்டையை கிளப்பினார். 36 பந்துகளில் சதம் அடித்த அவர், சிக்ஸர் பௌண்டரிகளை பறக்க விட்டார்.
இதனால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்து வைபவ் சூர்யவன்சி இரட்டை சதத்தை தவறவிட்டார். அதேபோன்று ஆயுஷ் 56 பந்துகளில் 116 ரன்கள் அடித்தார். இதில் 8 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் அடங்கும். இந்த கட்டத்தில் நடுவரிசையில் களமிறங்கிய சகிப்புல் கனி 32 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். உலக அளவில் ஜேக் பிரேசர் மற்றும் டிவில்லியர்ஸ்க்கு பிறகு அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை சகிப்புல் கனி பெற்றிருக்கிறார். இதன் காரணமாக 50 ஓவர் முடிவில் பீகார் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருக்கிறது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக், 50 ஓவர் முடிவில் 574 ரன்களா? வாட்! என்று அவர் ஆச்சரியமாக பதிவிட்டு இருக்கிறார். எனினும் இந்த உலக சாதனை படைக்கப்பட்ட போட்டியில் ஒரு வீடியோவை கூட ரசிகர்களால் காண முடியவில்லை. ஏனென்றால் இந்த போட்டியை பிசிசிஐ ஒளிபரப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.