மும்பை : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய ஆடவர் அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் பார்வையற்றவர்களுக்கான டி20 உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இந்திய அணிக்கு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று கூறி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்திய அணிக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி அளிக்கவில்லை.

இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தாங்கள் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் பிசிசிஐயின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் தான் பார்வையற்றவர்களுக்கான டி20 உலக கோப்பை போட்டி பாகிஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் பங்கேற்க இந்திய பார்வையற்றவர்களுக்கான டி20 அணி சார்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது இதற்கு விளையாட்டு துறை அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இறுதி கட்ட அனுமதியை வழங்க உள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு பார்வையற்றவர்களுக்கான இந்திய அணியை மட்டும் பாகிஸ்தானுக்கு செல்ல விளையாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்திய ஆடவர் அணிக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் பார்வையற்ற இந்திய வீரர்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று ரசிகர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பாதுகாப்பு என்று வரும்போது இரண்டு அணியினரையும் சமமாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி வரவில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே பார்வையற்றவர்களுக்கான டி20 உலக கோப்பையை நடத்தப் போவதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.