அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் செய்த தவறு ஒன்றுதான் சிஎஸ்கே அணி வெற்றி பெற காரணமாக அமைந்ததாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான நெஹ்ரா தான் தற்போது குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.
நெஹ்ரா செய்த ஒரு தவறு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் DLS விதிப் படி 15 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சிஎஸ்கேவுக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி ஆறு பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோகித் சர்மா தொடர்ந்து யாக்கர்களை வீசி சிஎஸ்கே வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் நான்கு பந்தில் மூன்று ரன்கள் தான் எடுக்கப்பட்டது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தான் ஒரு தவறு நடந்தது.
குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா தனது அணி வீரரை களத்திற்கு அனுப்பி ஏதோ ஒரு அட்வைஸ் கொடுத்தார். இதனை அடுத்து அந்த வீரரும் ஜூஸ் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு நெஹ்ரா சொன்ன தகவலை அவரிடம் எடுத்து கூறினார். அப்போது நடுவர்கள் இதனை தடுத்தனர்.

எனினும் தமக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மோகித் சர்மா நடுவரிடம் கூறிவிட்டு அந்த வீரரிடம் மோகித் பேசினார். அருகில் ஹர்திக் பாண்டியாவும் மோகித் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக கடைசி ஓவரில் ஒரு பவுலர் அதிக ரன்களை முதல் மூன்று பந்துகளில் கொடுத்தால் தான் மற்ற வீரர்கள் அவரிடம் பேசி அறிவுரை வழங்குவார்கள்.
இதன் மூலம் போட்டியை தாமதப்படுத்தி பேட்ஸ்மேனின் உத்வேகத்தை குலைக்க முடியும். ஆனால் நன்றாக பந்து வீசிக் கொண்டிருந்த வீரரிடம் தேவையில்லாமல் பேசி நெருக்கடியில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள குஜராத் அணியினர் நேரம் கொடுத்து விட்டனர். இதன் காரணமாக தான் ஜடேஜா கடைசி பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்ற பிளானை அமைத்து கொண்டார்.

மேலும் நன்றாக பந்து வீசிய மோஹித் சர்மாவும் கடைசி இரண்டு பந்தை தவறுதலாக வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், மோகித் சர்மா நன்றாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அவரை அவர் போக்கில் விட்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் அவரிடம் பேசி குஜராத் அணி தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பலரும் நெஹ்ராவை மற்றும் மோகித் சர்மாவை சிஎஸ்கே வின் ஸ்லீப்பர்ஸ் செல்ஸ் என்று விமர்சித்து வருகிறார்கள்.