டெல்லி: 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணி நஷ்டத்தால் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தனது சம்பளத்தை கூட பெற்றுக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான், இந்தியாவில் கிரிக்கெட்டும் பாலிவுட்டும் தீவிரமாக இணைந்த தருணமாக பார்க்கப்படுகிறது. அதுநாள் வரை இருதரப்பும் பார்ட்டிகளில் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரால் மைதானங்களிலேயே பாலிவுட் நடிகர், நடிகைகள் குவிய தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளை பிரபலப்படுத்த பாலிவுட் நடிகர்களையும் அணி நிர்வாகங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருந்தது.

இதனால் மும்பை அணி ஹிருத்தி ரோஷனையும், சென்னை அணி நடிகர் விஜயையும், கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் உரிமையாளரான ஷாரூக் கானே விளம்பர தூதராக செயல்பட்டனர். அந்த வகையில் சேவாக் தலைமையில் உருவாக்கப்பட்ட டெல்லி அணியை பிரபலப்படுத்த அக்ஷய் குமாரை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. 3 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் டெல்லி அணியின் விளம்பர வீடியோக்கள், விளம்பர நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அக்ஷய் குமார் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அக்ஷய் குமாரை வைத்து ஒரேயொரு வீடியோவை மட்டுமே டெல்லி அணி நிர்வாகம் எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் டெல்லி அணி நிர்வாகம் பல்வேறு நிதி நெருக்கடியுடன் இயங்கி வந்தது. இந்த நிதி சிக்கலை கட்டுப்படுத்தும் வகையில், அக்ஷய் குமாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்ஷய் குமாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு கோடிக்கணக்கான பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த சூழலில் 2002ஆம் ஆண்டு இந்திய அணியின் மேலாளராக இருந்த மாத்தூர், அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார். அப்போது டெல்லி அணியின் நிலையை அந்த அணி நிர்வாகி மாத்தூர், அக்ஷய் குமாரிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனை பொறுமையாக கேட்ட அக்ஷய் குமார், இது சரியாக வரவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம்.
நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. என் வழக்கறிஞரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நடிகர் அக்ஷய் குமார் கோடிக்கணக்கான ரூபாயை ஒப்பந்தத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஒப்பந்தத்தை டெல்லி அணிக்கு சாதகமாக விட்டுக் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதையடுத்து, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.