மும்பை: பாலிவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் மர்மங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்தது. பல ஆண்டுகளாக அவரைச் சுற்றி வலம் வரும் எண்ணற்ற கதைகளில், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானை அவர் காதலித்ததாக கூறப்படுவதும் ஒன்று.
இது தொடர்பாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு பத்திரிக்கை செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, இந்த பழைய காதல் கதைக்கு புத்துயிர் அளித்துள்ளது.

தமிழக நடிகர் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி தம்பதியின் மகளான ரேகா 80 களில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். அவரைக் குறித்த கிசுகிசுக்களும் அப்போது அதிகம். இந்த நிலையில், 1980-களில், நடிகை ரேகாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அப்போதைய கேப்டன் இம்ரான் கானும் பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகக் காணப்பட்டனர்.
அவர்களது தொடர்ச்சியான சந்திப்புகள், இருவருக்கும் இடையே வெறும் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருப்பதாக கிசுகிசுக்களைக் கிளப்பின. திருமணம் வரை செல்லக்கூடிய அளவுக்கு அவர்களது காதல் வலுவாக இருப்பதாக அன்றைய பத்திரிக்கைகளின் கிசுகிசுப் பக்கங்கள் தீப்பிடித்து எரிந்தன.
குறிப்பாக, 1985-ம் ஆண்டு வெளியான 'ஸ்டார்' பத்திரிகையின் அறிக்கை ஒன்று, இம்ரான் கான் பல வாரங்கள் மும்பையில் ரேகாவுடன் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டது. மும்பை கடற்கரைகளில் இருவரும் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டதாகவும், அவர்களது நெருக்கத்தைக் கண்டவர்கள், இருவரும் ஆழமான காதலில் இருப்பதாக உறுதியாக நம்பியதாகவும் அந்த அறிக்கை விவரித்தது.
இந்தக் காதல் கதைக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டும் வகையில், ரேகாவின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பவல்லியின் பங்கு இருந்தது. அவர் இம்ரான் கான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததாகவும், தனது மகளுக்கு அவர் ஒரு பொருத்தமான துணையாக இருப்பார் என்று நம்பியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதனை உறுதி செய்வதற்காக, புஷ்பவல்லி டெல்லிக்குச் சென்று ஒரு ஜோதிடரை சந்தித்து, இருவரது ஜாதகப் பொருத்தத்தையும் பார்த்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அந்த ஜோதிடர் என்ன சொன்னார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இம்ரான் கான் தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வரவாக இருப்பார் என்பதில் ரேகாவின் தாயார் உறுதியாக இருந்தார்" என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிக்கைகளின் பரபரப்பான செய்திகள், தாயாரின் முழு ஆதரவு என அனைத்தும் இருந்தபோதிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேகா - இம்ரான் கான் திருமணம் நடைபெறவில்லை. காலப்போக்கில், இருவரும் தங்கள் பாதைகளில் தனித்தனியே பிரிந்து சென்றனர். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது இன்றுவரை பாலிவுட்டின் புரியாத புதிர்களில் ஒன்றாகவே உள்ளது.
முக்கியமாக, ரேகாவோ அல்லது இம்ரான் கானோ, தங்களுக்குள் காதல் இருந்ததாக ஒருபோதும் பொதுவெளியில் உறுதிப்படுத்தியதில்லை. எனவே, இந்தக் கதை "பாதி வதந்தி, பாதி மர்மம்" நிறைந்த ஒன்றாகவே உள்ளது. 40 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த காதல் கதை, இருபெரும் ஆளுமைகளின் கடந்த காலத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது.