பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் ஆக துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வீழ்ந்தார். அவர் எட்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மிட்செல் ஸ்டார்க் விரித்த வலையில் ஜெய்ஸ்வால் வீழ்ந்தார்.
பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீசினர். மிட்செல் ஸ்டார்க் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை ஆஃப் சைடில், நான்காவது ஸ்டம்ப் லைனில் வீசினார்.

டெஸ்ட் போட்டிகளில் இது போல பந்து வீசுவதன் மூலம் பேட்ஸ்மேன் எட்ஜ் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதற்காகவே மிட்செல் ஸ்டார்க் இவ்வாறு வீசினார். பெர்த்தில் அதிக பவுன்ஸ் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளத் தவறிய ஜெய்ஸ்வால் ஃபுல் லென்த்தில் வந்த பந்தை ஆஃப் சைடில் டிரைவ் அடிக்க முயன்றார். ஆனால், பந்து எட்ஜ் ஆகி கல்லி திசையில் நின்றிருந்த நாதன் வசம் கேட்ச் ஆக சென்றது.
பந்து சற்று அதிகமாக பவுன்ஸ் ஆனதால் ஜெய்ஸ்வால் இவ்வாறு அவுட் ஆனார். அந்த வகையில் மிட்செல் ஸ்டார்க் விரித்த வலையில் ஜெய்ஸ்வால் சிக்கினார். ஜெய்ஸ்வால் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை இடது கை வேகப் பந்துவீச்சாளர்களை சந்தித்து இருக்கிறார். அதில் நான்கு முறை அவர்களிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். அந்த ஐந்து இன்னிங்ஸ்களில் 58 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
இதன் மூலம் இடது கை வேகப் பந்து வீச்சாளர்களிடம் ஜெய்ஸ்வால் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த போது இந்திய அணி 5 ரன்கள் எடுத்து இருந்தாலும் அந்த ஐந்து ரன்களும் எக்ஸ்ட்ரா மூலமாக கிடைத்தது. அந்த வகையில் இந்தியா பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.