பெர்த்: 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக மிகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதுவே இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 1947 ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.

அந்த சாதனையை முறியடித்து இருக்கும் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு சுருட்டி இருக்கிறது. மேலும், ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இது ஆஸ்திரேலியாவின் நான்காவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். மற்ற மூன்று குறைந்த ஸ்கோர்களும் இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்டவை.
இது தவிர தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர்களின் பட்டியலில் இது மூன்றாவது ஸ்கோர் ஆக இது இடம் பெற்று உள்ளது.
அதேபோல இந்திய அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனினும், ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு சுருட்டி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்து, அதை வைத்து முன்னிலை பெற்ற பட்டியலில் இந்த ஸ்கோர் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணியை 150 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலிய அணி அடுத்து மோசமாக ஆடியது. அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்து இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 12 ரன்களை தாண்டவில்லை.