மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தால் இந்த தொடரை 1 - 1 என இந்திய அணி சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அது எப்படி? என்று பார்க்கலாம்.
தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணிக்கு ஐந்தாம் நாள் அன்று 350 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. அத்தனை பெரிய இலக்கை டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எட்டுவது கடினமே.

அதே சமயம், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து டிரா செய்வதும் சவாலான விஷயமே. இந்திய அணி தற்போது இருக்கும் நிலையில், டிராவை நோக்கி ஆடுவதே சரியான முடிவாக இருக்கும். நான்காவது டெஸ்ட்டை இந்திய அணி டிரா செய்தால் தொடர் 1 - 1 என சமநிலையில் இருக்கும்.
அடுத்து சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டிகள் மோசமான வானிலை காரணமாக டிரா ஆகி உள்ளன.
எனவே, இந்த முறை சிட்னி டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இந்த டெஸ்ட் தொடர் 1 - 1 என சமனில் முடிவடையும். இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்று உள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி மழையால் டிராவில் முடிவடைந்தது. எனவே, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை மட்டும் சமாளித்து ஆடி டிரா செய்தால், சிட்னி டெஸ்ட் போட்டியையும் டிரா செய்து தொடரை சமன் செய்ய முடியும்.
ஏற்கனவே, இந்திய அணி நான்கு முறை தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று இருக்கிறது. கடைசியாக 2021 ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அந்த கோப்பையை இந்திய அணி தக்க வைத்திருந்தது, எனவே, விதிப்படி தற்போது நடைபெற்று வரும் தொடர் சமனில் முடிவடைந்தால் முந்தைய தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி வசமே கோப்பை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.