பெர்த்: "இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கவே வேண்டாம். அவர் இந்தியாவிலேயே இருக்கட்டும்" என இந்திய ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டி துவங்குவதற்கு முன் வரை ரோஹித் சர்மா முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை விளையாட வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில் நிலைமை தற்போது தலைகீழாக மாறி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பு எடுத்து கொண்டார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருப்பதால் அவர் முதல் போட்டியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டார்.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விளையாட இருக்கிறார். விரைவில் அவர் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். ரோஹித் சர்மா இல்லாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் முதல் 20 ஓவர்களில் பந்துகளை சந்திக்க மிக கடினமாக இருந்த நிலையிலும் ராகுல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடித்து 78 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்தார்.
அம்பயரின் தவறான முடிவால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து களத்தில் இருக்கிறார் ராகுல். மேலும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 90 ரன்கள் எடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி வரும் பும்ரா தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்திய அணி முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாமலேயே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியின் போது மீண்டும் அணிக்கு திரும்பினால் கே எல் ராகுல் மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். அவர் துவக்க வீரராக சிறப்பான செயல்பாட்டை வைத்திருக்கும் நிலையில், அவர் துவக்க வீரராகவே ஆட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
அதற்காகவே ரோஹித் சர்மாவை இந்தியாவிலேயே இருக்கும்படி அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், 2020 - 21 இல் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது கேப்டனாக இருந்த விராட் கோலி முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு பின்னர் இந்தியாவுக்கு சென்று விட்டார். அப்போது இந்திய அணி துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தலைமையில் விளையாடி தொடரை கைப்பற்றி இருந்தது. அந்த உதாரணத்தை முன்வைத்து ரோஹித் சர்மா இல்லாமல் துணை கேப்டன் பும்ரா தலைமையில் இந்திய அணி இந்த தொடரை வெல்லும் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.