பெர்த் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரம் உள்ள நிலையில் சில அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்று பலரும் தங்களது கணிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.
அதில் குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நிச்சயம் பெர்த் டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் பல அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பந்தமே இல்லாமல் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை பிளேயிங் லெவனில் இருந்து கம்பீர் அதிரடியாக நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க கம்பீர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. வாஷிங்டன் சுந்தர் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், இந்திய அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளரான அஸ்வினை கம்பீர் சேர்க்காமல் நீக்கிவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோன்று இந்திய அணியில் நிதிஷ் குமார் மற்றும் ஹர்ஷித்ராணா ஆகியோர் அறிமுகமாக போவதாக அந்த ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. எனினும் இது உண்மையா இல்லையா என்பது பிளேயிங் லெவன் வெளியிடப்படும் போது தான் தெரியும்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு பிளேயிங் லெவன் தான் இருக்கும் என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய செய்தியாளர்கள் பலரும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக தான் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நித்திஷ் ரெட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் அஸ்வின் இடம்பெற மாட்டார் என்று வெளியாகி உள்ள செய்தி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.