பெர்த்: இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவை மித வேகப்பந்துவீச்சாளர் என்று கூறிய ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்களுக்கு, தோனி ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தொடங்குவதற்கு முன்பாக அந்நாட்டு மீடியாக்கள் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுக்க தொடங்கிவிடுவார்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு வீரருக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு ஆஸ்திரேலியா அணியை ஆதிக்கம் செலுத்தி இருந்தால் மட்டுமே நடக்கும்.

இம்முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த காரணங்களால் பெர்த் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் மாற்று கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா களமிறங்கி இருக்கிறார். இன்று காலை பார்டர் கவாஸ்கர் கோப்பையை பெர்த் மைதானத்தில் இரு அணியின் கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர்.
இதன்பின் இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தினர். இந்திய அணியின் கேப்டனாக பும்ரா 2வது முறையாக களமிறங்கினாலும், ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது காய்ச்சல் காரணமாக ரோஹித் சர்மா விளையாட முடியாததால், வேறு வழியின்றி பும்ரா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இம்முறை ஜஸ்பிரிட் பும்ரா தான் அடுத்த கேப்டன் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் பும்ராவை இந்திய அணியின் கேப்டனாகவே ரசிகர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாகவே பும்ராவின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் தோனிக்கு நிகரான முதிர்ச்சி காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்களின் சீண்டலை பும்ரா மிக சாதாரணமாக தோனி ஸ்டைலில் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் ஒருவர், ஒரு மித வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியை வழிநடத்துவது எப்படி இருக்கிறது என்று பும்ராவை வம்புக்கு இழுக்கும் வகையில் கேள்வியை எழுப்பினார்.
அதற்கு எந்த டென்ஷனும் இல்லாமல் பும்ரா, பாஸ்.. என்னால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியும்.. குறைந்தபட்சம் என்னை வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாவது அழைக்கலாம் என்று ஜாலியாக பதில் அளித்தார். தொடர்ந்து, என்னை ஒரு ஃபாஸ்ட் பவுலிங் கேப்டனாக பார்க்கவில்லை. ஒரு இந்திய வீரராக எனது கடமை என்று நினைத்து, இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதனை செய்ய வேண்டும்.
இந்திய அணியை அடுத்த லெவலுக்கு உயர்த்த வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பும்ரா, இதுவரை 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த முறை கடைசி போட்டியின் போது காயத்தால் வெளியில் அமர்ந்திருந்த போதும், சிராஜ்-க்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு தலைவனாக நின்று வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது.