"ஒன் டவுன்"ல இறக்கியும் சோபிக்காத கோஹ்லி.. !
பெர்த்: அணியில் எந்த இடத்தில் ஆடுவது என்பது குறித்து எந்த வீரரும் கவலைப்படக் கூடாது. ஒட்டுமொத்த நல்லதை மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டும். இதற்காக தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று விராத் கோஹ்லிக்கு கேப்டன் டோணி மறைமுகமாக கொட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் கோஹ்லியை இன்று ஒன் டவுனில் அதாவது 3வது வீரராக களம் இறக்கியும் கூட அவர் சொதப்பி விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி 3வது வரிசையில் இறங்கி ஆடவே விரும்புவார். ஆனால் அவரை டோணி, தற்போது 4வது இடத்திற்குத் தள்ளி விட்டுள்ளார். அந்த இடத்தில் ஆட முடியாமல் கோஹ்லி திணறி வருகிறார். நடப்பு முத்தரப்புத் தொடரிலும் அவர் 4வது இடத்தில் சரியாக ஆட முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ளார். முதல் 3 போட்டிகளிலும் அவர் மொத்தமாக 16 ரன்களே எடுத்திருந்தார்.
கடந்த மூன்று போட்டிகளிலும் அவர் சரிவர ஆடாமல் அவுட்டாகி விட்டார். கோஹ்லியை 3வது வரிசையில் இறக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர். ஆனால் அந்த இடத்தை கோஹ்லி மறந்து விட வேண்டும் என்று கேப்டன் டோணி அதிரடியாக கூறியுள்ளார்.
பெர்த் நகரில் இன்று தொடங்கிய இங்கிலாந்துடனான மோதலுக்கு முன்னதாக அவர் அளித்த பேட்டியில், எந்த வீரர் எந்த இடத்தில் ஆடுவது என்பது இங்கு முக்கியமல்ல. அணியின் வெற்றிக்கு எது நல்லது என்பதுதான் இங்கு முக்கியமானது. எனவே நமக்குப் பிடித்தமான இடத்தில் ஆட வேண்டும் என்று வீரர்கள் ஆசைப்படக் கூடாது. தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
விளையாடும் இடத்தை விட விளையாடும் ஓவர்கள்தான் முக்கியமானது. தொடக்க ஆட்டக்காரர்கள் 38வது ஓவர் வரை நின்று விட்டார்கள் என்றால், பின்னால் வரும் வீரர்கள் 7வது இடத்தில் விளையாடவே விரும்புவார்கள். யாரும் 3வது இடத்திற்கு ஆசைப்பட மாட்டார்கள் என்றார் டோணி.
3வது வீரராக இறக்கியும் சொதப்பிய கோஹ்லி
இருப்பினும் இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்தியா சொதப்பி வருகிறது. கோஹ்லியை இன்று ஒன்டவுனில் இறக்கினார் டோணி. ஆனாலும் கோஹ்லி சரியாக ஆடவில்லை. வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications