டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால், கேப்டனை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி திடீரென வேகமெடுத்துள்ளது. வெற்றிகளைப் பெற்று வருவதுடன், பேட்டிங் மற்றும் பவுலுங்கிலும் கலக்கி வருகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி என்று மோசமான நிலையில் இருந்தது.
தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கவுதம் கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, டெல்லி அணி அசத்தி வருகிறது. மூன்று ஆட்டங்களில் இரண்டில் வென்றுள்ளது.
கடைசி நிலையில் இருந்த டெல்லி அணி தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் டெல்லியின் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். 375 ரன்களை அவர் சேர்த்துள்ளார். மேலும் அதிக பவுண்டரிகள் அடித்தோர் பட்டியலிலும் 40 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் டெல்லியின் டிரென்ட் போல்ட் பெற்றுள்ளார். அவர் 13 விக்கெட்களை இதுவரை வீழ்த்தியுள்ளார்.