மும்பை: இந்தியாவை மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று வீழ்த்தியது இந்தியர்களுக்குப் பெரிய ஏமாற்றம்தான் என்றாலும் கூட மற்ற அணிகளைப் போல மேற்கு இந்தியத் தீவுகளை இந்திய ரசிகர்களால் வெறுக்க முடியாது.. காரணம் அது என்னமோ, என்ன மாயமோ தெரியவில்லை. மேற்கு இந்திய அணி என்றாலே அதுவும் நம்ம அணி போலத்தான் என்ற உணர்வு நமக்குள் இருக்கிறது.
இந்த உணர்வானது இப்போது இரு நாட்டு வீரர்களுக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் ஆடத் தொடங்கியது முதலே இந்திய வீரர்களைப் போலவே அவர்களும் மாறி விட்டனர்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வந்த பிராவோ பக்கா சென்னைக்காரர் போலவே மாறிப் போய் விட்டார். ஒரு படத்தில் வேட்டி கட்டி ஆடவும் விட்டு விட்டனர் இவரை.
இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பிறகு டோணியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் போட்டுள்ளார் பிராவோ தனது டிவிட்டர் பக்கத்தில். அதில் வெற்றியோ, தோல்வியோ நாம் எப்போதும் மச்சான்தான் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நீங்க போய் இங்கிலாந்தைப் புரட்டிப் போட்டுட்டு வாங்க தம்பி.. !