
பணத்தை வாரி இறைக்கும் பிரேசில்:
இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என சுமார் ரூபாய் 21,362 கோடி செலவாகியுள்ளது. இது தவிர புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செலவு ரூபாய் 5340 கோடி.

அதிக செலவு:
இங்கிலாந்தின் வெம்பிலே மைதானத்திற்கு அடுத்தபடியாக அதிக செலவுமிக்க மைதானங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது இந்த மைதானம்.

கண் துடைப்பு காரணங்கள்:
இந்த கட்டுமானங்களில் மதிப்பிடப்பட்டதை விட செலவு அதிகரித்ததற்கு ஊழலே காரணம் என்று பிரேசில் அரசு கண் துடைப்பு விசாரணைகளை அறிவித்திருக்கிறது.

நியாயப்படுத்தப்படும் செலவுகள்:
கடந்த ஆண்டு மக்கள் எதிர்ப்பிற்கிடையே நடந்து முடிந்த கான்ஃபிடரேசன் கோப்பை, இந்த ஆண்டு கால்பந்து உலககோப்பை, 2016 இல் ஒலிம்பிக் என அடுத்தடுத்து பிரம்மாண்டமான சர்வதேச போட்டிகளை நடத்திவருகிறது பிரேசில். தேச பெருமிதம் என்ற பெயரால் இந்த செலவுகள் நியாயப்படுத்தப்படுகிறது.

சுருக்கப்படும் நலத்திட்டங்கள்:
மற்றொரு புறத்தில் அதே அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிசுருக்கி வருகிறது. குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று கூறி முடக்கப்படுகின்றன. பிரேசில் மக்களில் சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

தவிக்கும் விவசாயிகள்:
நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில், சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர். பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லை.

போக்குவரத்து கட்டண உயர்வு:
போக்குவரத்து கட்டணங்கள் அதிக அளவில் உயர்த்தப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் விளைவாக நகரங்களில் வீட்டு வாடகை அதிகரித்து அதை செலுத்த இயலாமல் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

எல்லா மக்களும் போராட்டம்:
இந்த பின்னணியில் தான் உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்வது, மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேசன் கோப்பை போட்டிகளின் போதே மக்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய போராட்டங்களில் மாணவர்கள்,தொழிலாளர்கள், வீடில்லாதவர்கள், அரசு ஊழியர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

கொதிக்கும் அரசு ஊழியர்கள்:
உலககோப்பைக்கு எதிரான போராட்டங்களுடன், தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றன தொழிற்சங்கங்கள். பல ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காத அரசு உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பர செலவு செய்வது அவர்களின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.

வேலை நிறுத்தம்தான் நடக்கும்:
ஆசிரியர்கள், தெரு சுத்தம் செய்வோர், பேருந்து ஓட்டுநர்கள் ஆகியோர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 50 நகரங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. "உலககோப்பை நடக்காது, வேலைநிறுத்தங்கள் தான் நடக்கும்" என்று இம்மக்கள் முழக்கமிடுகின்றனர்.

பழங்குடியினரும் இணைவு:
பிரேசிலின் பழங்குடி மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். தங்களின் நிலஉரிமைக்கு எதிராக பிரேசில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி,ஏற்கனவே தொடர்ச்சியான பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.

வன்முறையை ஏவும் அரசு:
பிரேசிலின் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. சாவ் பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் இரப்பர் குண்டுகள் மூலம் கலைக்க முயன்றது போலீஸ். உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் சமயத்தில் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்காக அதிக அளவில் போலீசை குவித்து வன்முறையை ஏவிவருகிறது அரசு.

ஓவியம் மூலம் பிரதிபலிப்பு:
கலைஞர்கள், ஓவியங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். வழக்கமாக பிரேசில் அணிக்கு ஆதரவாக வரையப்படும் சுவர் ஓவியங்களுக்கு பதிலாக இம்முறை உலககோப்பை போட்டிகளுக்கு எதிரான சுவரோவியங்கள் தான் அதிகம் காணக் கிடைக்கின்றன.

பசிக்கும் வயிறுக்கு இதுவா தேவை? :
அதிலும், பசித்த கண்கள் மற்றும் ஒட்டிய வயிறுடன் ஒரு சிறுவன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க அவனுக்கு கால்பந்தை பறிமாறுவது போன்ற ஒவியம் சமூகவலைத் தளங்களில் அதிகம் பரவிவருகிறது.

புரட்சிகள் வெடிக்கும் அபாயம்:
இந்த அரசு நமக்கான அரசு அல்ல. இந்த அரசிடம் முறையிட்டு பலனில்லை. அரசை கைப்பற்றினால் தான் தீர்வு என்பதை பிரேசில் மக்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தான் இந்த போராட்டங்கள் காட்டுகின்றன. இந்த போராட்டங்கள் மூலம் அரசை வீழ்த்தக்கூடிய புரட்சிகர கட்சிகள் தோன்றி வளரும் போது பிரேசில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

மக்கள் வெற்றிதான் மகிழ்ச்சி நமக்கு:
புகழ்மிக்க பிரேசில் அணி, உலகக் கோப்பையை வெல்வதைவிட, பிரேசிலின் எளிய மக்கள் இந்த போராட்டத்தில் வெல்வதே, இன்றைய தேவையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











