
இந்திய ரசிகர்களுக்கு வசதி
கடந்த 12ம்தேதி துவங்கிய, உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்று முடிவில் 16 அணிகள் போட்டித்தொடரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. 16 அணிகள் பங்கேற்கும் அடுத்த சுற்று ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் பிரேசிலும், சிலி அணியும் பேலோ ஹரிசோன்ட் நகரின் மினேய்ரா மைதானத்தில், இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. எனவே, இந்திய ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்காமல் பார்க்க முடியும்.

பிரேசில் ஆதிக்கம்
சிலியுடன், பிரேசில் மோதிய கடந்த 68 போட்டிகளில், பிரேசில் 8 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில், சிலியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது. இம்மூன்று போட்டிகளில் பிரேசில் அணி 11 கோல்கள் போட்டுள்ளது.

சிலியை குறைத்து மதிப்பிடவில்லை
ஆனால் இம்முறை சிலி அணியை பிரேசில் குறைத்து மதிப்பிடவில்லை. பிரேசில் வீரர் வில்லியன் இதுபற்றி கூறுகையில், ஒரேமாதிரியான வெற்றி தொடரும் என்று பிரேசில் மெத்தனமாக இல்லை. ஏனெனில் கால்பந்தாட்டம் தற்போது மிகவும் மாறியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒருதனித்துவம் உள்ளது. சிலி தற்போது மிகுந்த உற்சாகத்திலும், நம்பிக்கையும் உள்ளது, என்றார்.

சிலியிடம் சீற்றம் உள்ளது
இந்த உலக கோப்பை போட்டித்தொடரில் சிலி சற்று அதிகமாக சிலிர்த்துக்கொண்டுதான் உள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியை 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று, வீட்டுக்கு அனுப்பிய உற்சாகம் சிலியிடம் இன்னும் குறையவில்லை. கடந்த உலக கோப்பையின் ரன்னர்-அப், அணியான நெதர்லாந்திடம் மட்டுமே, குரூப் போட்டிகளில் சிலி தோற்றுள்ளது.

மந்தகதியில் பிரேசில்
அதே நேரம் பிரேசில் அணி எதிர்பார்ப்புக்கு தக்கபடி இன்னும் ஆடத்தொடங்கவில்லை. மெக்சிகோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு கோல் கூட பிரேசிலால் போடமுடியவில்லை. இறுதியில், பூஜ்யத்துக்கு, பூஜ்யம் என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் பிரேசில் ரசிகர்கள் அதிருப்தியுள்ளனர்.

வேறு அணி வந்திருந்தால் தேவலை..
தனது அணியில் நெய்மரை தவிர பிற வீரர்கள் மட்டமாக ஆடுவதை கருத்தில் கொண்டுதான் பிரேசில் பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்கோலரியும் கூட, சிலிக்கு பதிலாக வேறு ஒரு அணி எங்களுடன் மோத தகுதி பெற்றிருந்தால் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

நசுக்குவாரா நெய்மர்?
சிலியின் ஆக்ரோஷத்தை பார்த்து மிரண்டு போயுள்ள பிரேசில் ரசிகர்கள், தங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர் இன்று மீண்டும் தனது விஸ்வரூபத்தை காண்பித்து சிலியை நசுக்க வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். லீக் ஆட்டங்களின் முடிவில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4 கோல்களுடன் நெய்மர் மற்றும், அர்ஜெண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் மெஸ்சி ஆகியோர் முதலிடங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











