'வெற்றி'கரமாக விடை பெற்றார் மெக்கல்லம்.. தொடர் வெற்றியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
ஹாமில்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, இன்று அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம்.
இன்று அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கூடவே தொடரையும் வென்றது.
கேப்டன் மெக்கல்லமுக்கு நியூசிலாந்து அணியினர் தொடர் வெற்றியுடன் சிறப்பான வழியனுப்புதலை இன்று வழங்கினர்.

அதிரடி பேட்டிங்
முன்னதாக ஹேமில்டனில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மெக்கல்லம் அதிரடியாக ஆடி 47 ரன்களைக் குவித்தார்.

அதிரடி பவுலிங்
பின்னர் நியூசிலாந்து தனது அதிரடி பவுலிங்கால் ஆஸ்திரேலியாவை நிலை குைய வைத்து 191 ரன்களுக்கு அதை சுருட்டி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

27 பந்துகளில் 47 ரன்கள் குவித்த மெக்கல்லம்
முன்னதாக மெக்கல்லம் 27 பந்துகளைச் சந்தித்து 47 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்த ஸ்கோரில் அவர் 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இது அவரது 200வது சிக்ஸர் ஆகும்.

260 ஒரு நாள் போட்டிகள்
மெக்கல்லம் இன்றைய போட்டியுடன் சேர்த்து மொத்தம் 260 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் அவர் தற்போது 4வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 351 சிக்ஸர்களுடன் ஷாஹித் அப்ரிதி உள்ளார்.


Click it and Unblock the Notifications