இந்தியா தோற்றதால் இங்கிலாந்து கோச் மெக்குல்லத்துக்கு நடந்த நன்மை.. டெஸ்ட் பதவி மட்டும் பறிப்பு
லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்குல்லம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆனால், சமீபத்தில் முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா 0-4 என தோற்றதால் மட்டுமே அவரது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவி தப்பியுள்ளது. இல்லையென்றால், அதையும் சேர்த்து பறித்து அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கும்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) பிரெண்டன் மெக்குல்லமை டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த 'பாஸ்பால்' அதிரடி ஆட்டமுறை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 1-2 என இழந்ததும், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1-4 என படுதோல்வி அடைந்ததும் இவரது நீக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், அணியில் குடிப்பழக்க கலாச்சாரத்தை அவர் ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களும் இவரது பதவியைப் பறித்துள்ளன. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குடித்து விட்டு சுற்றியது, சண்டை போட்டது செய்தியானது. அதன் உச்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே பார் ஒன்றில் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவர் அந்த தொடரின் முடிவில் ஓய்வு பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து மெக்குல்லம் உடைய டெஸ்ட் பயிற்சியாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
எனினும், மெக்குல்லம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகத் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியதே மெக்குல்லம்-இன் பதவியைக் காப்பாற்றியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாகத் தோற்காமல் இருந்திருந்தால், மெக்குல்லமின் வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) பயிற்சியாளர் பதவியும் பறிபோயிருக்கும். இந்தியா தோற்றதால் மட்டுமே அவர் தற்போது தப்பியுள்ளார்.
தனது நீக்கம் குறித்துப் பேசிய மெக்குல்லம், டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக இருந்ததை பெருமையாகக் கருதுவதாகவும், வாரியத்தின் முடிவை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இனி தனது முழு கவனமும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மீது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். புதிய டெஸ்ட் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் இங்கிலாந்து வாரியம் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
