லண்டன் : மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த சாதனையை யார் உடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பிரையன் லாரா சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு காலத்தில் கேரி சோபர்ஸ் 365 ரன்கள் அடித்ததுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது.

இதுகுறித்து பேசிய பிரையன் லாரா, சோபர்ஸ் அடித்த சாதனையை 1970 மற்றும் 80களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும் என்று பிரையன் லாரா கூறினார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இங்கிலாந்து அணி ஒரு புதிய முறையில் அணுகுவதாகவும் எந்த போட்டியாக இருந்தாலும் சரி முதல் சேஸ்னில் 100 ரன்கள் அடிக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி பேஸ்-பால் அணுகுமுறையுடன் விளையாடி வருகிறது. சூழலுக்கு ஏற்ப விளையாடுவதை விடவும் அதிரடியாக ரன்கள் சேர்க்கும் போது எதிரணி பவுலர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நம்புகின்றனர். இதனால் பிரையன் லாராவின் சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.