லண்டன்: இந்த முறை இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியா தான் உலக கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் லாரா கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பலரும் ஆரூடம் கூறி வருகின்றனர்.
இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அற்புதமாக ஆடி வருகிறது. சில ஆண்டுகளாக பல முக்கிய வெற்றிகளையும் குவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வலுவாக திகழ்கிறது. பல வெற்றிகளை குவித்து தரமான மற்றும் வலுவான அணியாக உள்ளது.
ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு வேறு கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கலவையிலான வீரர்களை பெற்றுள்ள நியூசிலாந்து, பவுலிங்கில் அசத்தி, இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளும் வலுவாக இருக்கின்றன. அதிலும் மேற்கிந்திய தீவுகளை பற்றி இப்போது எதுவும் கணிக்க முடியாது என்று தோன்றுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்தது, பாகிஸ்தானை 105 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டதே உதாரணம்.
ஒவ்வொரு அணியும் வலுவாக உள்ள நிலையில், உலக கோப்பையை எந்த அணி வெல்லும், அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இதுகுறித்து பேசிய லாரா, இங்கிலாந்தை விட இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணி சிறந்த அணி தான். இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து கடும் சவாலை தரும். அரையிறுதியில் கண்டிப்பாக ஆடும். ஆனால் இறுதி போட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் இங்கிலாந்து அணி சரியாக ஆடியதே இல்லை. இது கடந்த கால வரலாறு.
எனவே கோப்பையை வெல்லும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புள்ளது. அந்த அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கிறது என்றார்.