மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் மூத்த வீரராக இருப்பவர் விராட் கோலி. தற்போது கிரிக்கெட் ஆடி வருபவர்களிலேயே அதிக அனுபவம் உடையவர். டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை நெருங்கி இருக்கிறார் விராட் கோலி. இந்த நிலையில் அவர் தனது 36வது வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்திருக்கிறார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. 2025-27 வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரையன் லாரா கோலி ஓய்வு முடிவு குறித்து பதிவு வெளியிட்டு இருக்கிறார். "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை. அவர் தனது ஓய்வு முடிவில் இருந்து வெளியே வர சம்மதிப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் மீதமுள்ள காலங்களில் 60 ரன்களுக்கு மேலான பேட்டிங் சராசரியில் ஆடுவார்" என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்திருக்கிறார் பிரையன் லாரா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக பார்க்கப்படுபவர் பிரையன் லாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் பிரையன் லாரா வைத்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்களைச் சேர்த்தது இன்றைய அளவிலும் எந்த பேட்ஸ்மானாலும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
இந்த நிலையில் அந்த ஜாம்பவான், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை என வலியுறுத்தி, அவரது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். பிசிசிஐ விராட் கோலி இடம் அவரது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளது. குறைந்தபட்சம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மட்டுமாவது விளையாடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து விராட் கோலி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.