4 ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அஸ்வின்.. அவமரியாதையாக பேசிய ஸ்ரீகாந்த்.. என்ன நடந்தது ?
திருவனந்தபுரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், சிறப்பாக பந்துவீசினார்.
டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வினுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நெருக்கடி
இந்த கட்டத்தில் தமிழக வீரர் அஸ்வினை பந்துவீச ரோகித அழைத்தார்.அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். அஸ்வின் பந்துவீச்சில் நேற்று ஒரு பவுண்டரி கூட தென்னாப்பிரிக்க வீரர்களால் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் 4 ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அஸ்வின் விட்டு கொடுத்தார்.

சாதனை சமன்
இதில் ஒரு ஓவர் முழுவதும் ரன் அடிக்கப்பட வில்லை. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களை விட்டு கொடுத்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 2016ஆம் ஆண்டு அஸ்வின் 4 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

நெருக்கடி
அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும், தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பந்துவீச்சாளர்கள் ஒரு முனையில் ரன்களை கட்டுப்படுத்தினால் போதும், அடுத்த முனையில் பந்துவீசும் வேறு வீரருக்கு பேட்ஸ்மேனுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விக்கெட் விழும்.

ஸ்ரீகாந்த் பேச்சு
இந்த நிலையில், தமிழக வீரர் அஸ்வினை வர்ணனை செய்யும் போது முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டேய் அஸ்வின் பந்தை கொஞ்சம் தூக்கி போடு டா, அப்போது தான் விக்கெட் விழும் என்று ஸ்ரீகாந்த் கூறினார். வயதில் குறைந்தவராக அஸ்வின் இருந்தாலும், மக்கள் பார்க்கும் நேரலை அஸ்வினை ஸ்ரீகாந்த் ஒருமையில் பேசியது தவறு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications