கோவை: தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜி பாபு கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் தமிழக அணியும், மும்பை அணியும் கோவையில் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்திய கிரிக்கெட்டில் பிரதான உள்நாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கு ஒரு முன்னோட்டமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புஜி பாபு கிரிக்கெட் தொடர் கருதப்படுகிறது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றனர்.

இலங்கையில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் பிரதோஷ் ரஞ்சன் 65 ரன்கள், பாபா இந்திரஜித் 61 ரன்கள், பூபதி 82 ரன்கள் எடுக்க தமிழக அணி 379 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து மும்பை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் களம் இறங்கியது. இதில் சர்ஃபாஸ்கானின் தம்பி முஷீர்கான் தொடக்க வீரராக களம் இறங்கி 16 ரன்கள் எடுத்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து சாய் கிசோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். சூரியகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடரில் பங்கேற்றார். 38 பந்துகள் எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
அஜித் ராம் பந்துவீச்சில் அவர் கேட்ச் ஆனார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருக்கிறது. இது தமிழக அணி எடுத்த ஸ்கோரை விட 238 ரன்கள் குறைவாகும். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. இதில் மும்பை அணி தோல்வியை தழுவ அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் களமிறங்கிய சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது அவர்களுடைய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த போட்டியில் இரண்டு ஸ்டார் வீரர்களின் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கோவை மைதானத்தில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.