சென்னை: தமிழகத்தை சேர்ந்த இடது கை சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் கடந்த சில மாதங்களாக தனது சிறந்த ஃபார்மில் இருக்கிறார். கடந்த ரஞ்சி ட்ராபி தொடரில் 55 விக்கெட்களை வீழ்த்திய அவர், தற்போது உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் விக்கெட் வேட்டையாடி வருகிறார். அதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியாக மாறி இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் அவர் டிஎன்சிஏ அணிக்காக ஆடி வருகிறார். இந்தத் தொடரில் முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி ஹரியானா அணியுடனான போட்டியை டிரா செய்ய உதவினார். அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் முக்கிய விக்கெட்களை வீழ்த்தியுடன் மொத்தம் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்திய டெஸ்ட் அணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். 13.2 ஓவர்களில் 36 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் டிஎன்சிஏ அணி முதல் இன்னிங்க்ஸில் 379 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி, சாய் கிஷோரிடம் சிக்கி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புஜ்ஜி பாபு தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் 14 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் சாய் கிஷோர்.
மும்பை அணியில் முக்கிய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தியதால் ரசிகர்களிடையே சாய் கிஷோர் பரவலாக கவனம் பெற்று இருக்கிறார். சமீபத்தில், "நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார் ஆகி விட்டேன். இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்களில் நானும் ஒருவன் என நினைக்கிறேன். டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுங்கள். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன்." என பேசி இருந்தார் சாய் கிஷோர். இந்த பேச்சை அடுத்து அவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதாகவே சிலர் நினைத்தனர். ஆனால், தற்போது புச்சி பாபு தொடரில் தனது பந்து வீச்சின் மூலம் தான் பேசியது சரிதான் என நிரூபித்து காட்டி இருக்கிறார் சாய் கிஷோர்.
இதன் மூலம் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் இந்தியாவின் சிறந்த இடது கை ஸ்பின்னர்களில் ஒருவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்குமே ஒரே நேரத்தில் அணியில் இடம் அளிக்க முடியாத நிலையை தற்போது உள்ளது.
இந்த நிலையில் சாய் கிஷோர் வெளிப்படையாக தனக்கு இந்திய அணியில் இடம் வேண்டும் என கேட்டதுடன் தற்போது பந்து வீச்சிலும் தன்னை நிரூபித்து வருகிறார். விரைவில் அவர் ஜடேஜாவுக்கு மாற்றாக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளராக மாறுவாரா? அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சாய் கிஷோருக்கு 27 வயதாகிறது. அவருக்கு இப்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் வயதான வீரர் என ஒதுக்கித் தள்ள வாய்ப்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டே அவர் தனக்கான வாய்ப்பை கேட்டு வருகிறார்.