சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டி உள்ளூர் டெஸ்ட் தொடரான புச்சி பாபு தொடரில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் மோசமான பேட்டிங் செயல்பாடுகளால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் இடம்பெற வேண்டி உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே, அதற்கு முன் தங்களை நிரூபித்து இந்திய டெஸ்ட் அணியில் தங்களுக்கான இடத்தை உறுதியாக பெறலாம் என்ற எண்ணத்தில் பல வீரர்களும் உள்ளூர் தொடரான புச்சி பாபு டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தாலும் அணியில் நிலவும் போட்டியை கருத்தில் கொண்டு புச்சி பாபு டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளனர். கடந்த சில மாதங்கள் முன்பு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக பேட்டிங் செய்யாததால் ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டார். பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதனால், அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் தான் இழந்த இடத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்.
அதே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் காயத்தால் விலகியதால் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இரண்டு போட்டிகளில் ஆடினார். தற்போது கே எல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் தனக்கு இடம் கிடைக்குமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் சர்ஃபராஸ் கான்.
எனவே, சர்ஃபராஸ் கான் மற்றும் ஸ்ரேயாஸ் புச்சி பாபு தொடரில் மும்பை அணியில் இடம் பிடித்து ஆடி வருகின்றனர். தமிழ்நாடு அணியான டிஎன்சிஏ 11 அணிக்கு எதிரான போட்டியில் மும்பை ஆடியது. அந்தப் போட்டியில் அவர்கள் இருவரும் மிக மோசமாக பேட்டிங் செய்தனர். ஸ்ரேயாஸ் முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்ஸில் 6 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி அளித்தார். மேலும் இவர்களது மோசமான ஆட்டத்தால் மும்பை அணி தோல்வி அடைந்தது. இவர்கள் இருவருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இனி இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று வாரத்தில் துவங்க உள்ளது. அதற்கு முன் துலீப் ட்ராபி உள்ளூர் தொடர் நடைபெற உள்ளது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் விளையாட உள்ளனர். அந்த போட்டிகளில் ரன் குவித்தால் மட்டுமே அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கக்கூடும்.
ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் வரிசையில் பலத்த போட்டி உள்ளது. ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் என முதல் ஆறு வரிசையில் பேட்டிங் செய்ய வீரர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ் கான், இந்திய அணியில் மாற்று வீரர்களாக மட்டுமே இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அவர்களின் மோசமான செயல்பாட்டால் அந்த இடத்தையும் கூட அவர்கள் இழக்க நேரிடலாம்.