மும்பை: சில ஆண்டுகளுக்கு முன் 'அடுத்த சச்சின் டெண்டுல்கர்' என்று இந்திய கிரிக்கெட் உலகமே கொண்டாடிய வீரர்தான் பிரித்வி ஷா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமை, சர்ச்சைகள் எனப் பல சரிவுகளைச் சந்தித்து, இந்திய அணியில் இருந்து காணாமல் போனார்.
இந்நிலையில், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி, "நான் மீண்டும் வந்துவிட்டேன்" என்று கர்ஜித்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்று வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில், மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கிய பிரித்வி ஷா, சத்தீஸ்கர் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக ஆடி சதம் அடித்தார். வெறும் 122 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், தனது பழைய அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார்.
இந்த சதத்திற்குப் பிறகு மனம்திறந்து பேசிய பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதாக உருக்கமாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: "மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் என் மீது, என் உழைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். இந்த சீசன் எனக்கும், என் அணிக்கும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்," என்றார்.
மேலும், "நான் எதையும் மாற்ற விரும்பவில்லை. எனக்கு இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத் தந்த எனது அண்டர்-19 நாட்களில் நான் என்ன செய்தேனோ, அந்த அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்கிறேன். அதிகப் பயிற்சிகள், ஜிம், ஓட்டம் என எல்லாவற்றையும் மீண்டும் தொடங்கியுள்ளேன்," என்று பிரித்வி ஷா கூறினார்.
கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானது குறித்துப் பேசிய அவர், "நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். சமூக வலைதளங்கள் போன்ற கவனச்சிதறல்களில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன். இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நிம்மதியாக இருக்கிறது," என்றார்.
தற்போதைய இந்திய அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கிறதா என்று கேட்டதற்கு, பிரித்வி ஷா அளித்த பதில் பலரையும் நெகிழச் செய்தது. "பரவாயில்லை. எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. நான் இதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறேன். என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு இருக்கிறது. மனரீதியாக நான் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னுடன் இருந்த என் நண்பர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்" என்று அவர் கூறினார்.
2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடாத பிரித்வி ஷாவின் இந்த கம்பீரமான சதம், அவரது மறுபிரவேசத்திற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. விமர்சனங்களையும், சரிவுகளையும் புறந்தள்ளி, தனி ஆளாகத் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கும் இந்த இளம் வீரரின் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.