நாட்டிங்ஹம் : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கும் ஜஸ்ப்ரிட் பும்ரா, நேற்று இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக் கோட்டுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
அது குறித்து பேசிய அவர் கேமராவுக்கு வெளியே நாங்கள் செய்யும் கடும் உழைப்பு தான் இது போன்ற நாள்களில் அதற்கான பலன்களை அளிக்கிறது என கூறினார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை இழந்த இந்தியா, தொடரை தக்க வைக்க இனி வரும் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 161 ரன்களில் சுருண்டது. பாண்டியா ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 352 ரன்களுக்கு ஏழு விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. 521 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து 62 ரன்களுக்கு நான்கு விக்கெட்கள் இழந்து தவித்தது. பின் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ், பட்லர் நிதானமாக ரன் குவித்தனர்.
231 ரன்கள் வரை இங்கிலாந்து எடுத்த நிலையில், ஆட்டத்தின் திருப்புமுனையாக பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. இதையடுத்து இங்கிலாந்து, தற்போது 311 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்கள் இழந்து, தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. பும்ரா இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியதோடு, இந்த போட்டியில் மொத்தம் ஏழு விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியாவிற்கு இன்னும் ஒரு விக்கெட் கிடைத்தால் வெற்றி என்பதால், இன்று ஆட்டம் துவங்கி சில நிமிடங்களிலேயே வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த வெற்றிகரமான பந்துவீச்சை நிகழ்த்திக் காட்டிய பும்ரா கூறுகையில், தான் காயம் உற்ற போதும் உடற்பயிற்சிகள் மற்றும் பந்து வீச்சு பயிற்சிகளில் முடிந்த வரை ஈடுபட்டதாகவும், கேமராவுக்கு வெளியே கடுமையான உழைப்பை கொடுத்தால், தற்போது அதன் பலன்களை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.