மும்பை:ஐபிஎல் வரலாற்றில் 10 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டியில் கும்ப்ளேவுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார் பும்ரா.
ரசிகர்களை 2 மாதங்களாக கட்டிப்போட்டியிருந்த ஐபிஎல் முடிந்துவிட்டது. சென்னையை வீழ்த்தி மும்பையும் 4வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு. சென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா.
கடைசி 4 ஓவர்களில் சென்னைக்கு 42 ரன்கள் தேவை. 2 அணிக்களுக்குமே இக்கட்டான தருணம். ஆனால், அப்போது 2 ஓவர்களை வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னையை கட்டி போட்டார் பும்ரா. அதுதான் மும்பைக்கு கோப்பையை பெற வழிகோலியது.
ஏன் எனில் பும்ராவின் பந்துவீச்சுக்கு பிறகு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்ட ரன் விகிதம் நெருக்கடியை தந்தது. கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை பறிகொடுத்தது. அதனால் இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப் பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பவுலர் பும்ரா தான். 2009ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய கும்ப்ளே, இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின்னர் 2019ம் ஆண்டில் பும்ராதான் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றவர்.