கொல்கத்தா: ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 2வது இடத்தைப் பிடித்த பெங்கால் அணிக்கு அதற்கான பரிசுத் தொகையை பெங்கால் கிரிக்கெட் சங்கம் விடுவித்துள்ளது.
நடப்பு ஆண்டு ரஞ்சிப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பெங்கால் அணிக்கு பிசிசிஐ ரூ. 1 கோடி பரிசுத் தொகையை அளிக்க வேண்டும். ஆனால் அதைக் கொடுக்காமல் இருந்து வந்தது. இதனால் வீரர்கள் கையில் பரிசுப் பணம் வராமல் இருந்தது.

இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் அதிரடியாக செயல்பட்டு தனது சொந்தப் பணத்திலிருந்து இதை விடுவித்துள்ளது. இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் அவிஷேக் டால்மியா கூறுகையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் வீரர்களின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே பணத்தை விடுவிக்க முடிவு செய்தோம் என்றார்.
பிசிசிஐக்காக காத்திருந்தால் காலதாமதம் ஆகி விடும் என்பதால் எங்களது பணத்திலிருந்து இதைக் கொடுத்துள்ளோம். அடுத்த 48 மணி நேரத்தில் வீரர்களின் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். இதுதொடர்பான முறையான பணிகள் முடிந்து விட்டன. சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இதுதொடர்பான தேவையான கையெழுத்துக்களையும் போட்டு விட்டனர்.
பணம் வழங்குவது தொடர்பான இன்வாய்ஸ்களும் ரெடி செய்யப்பட்டு விட்டன. பிசிசிஐக்கு இது அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து பிசிசிஐ எங்களுக்கு இந்தப் பணத்தை இந்த வாரத்திற்குள் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.