டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.. பாலியல் வழக்கில் அதிரடி
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் மற்றும் தேசிய அளவில் பெங்கால் அணிக்காகவும் விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலை, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய கல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அபிஷேக் போரலுக்கு 23 வயது ஆகிறது. அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடி வருகிறார். இந்த நிலையில், மொக்ரா காவல் நிலையத்தில் அவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "கடந்த 2023 ஜனவரி முதல் அபிஷேக் என்னுடன் பழகி வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மங்குண்டு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் எங்களது அந்தரங்க காட்சிகளைத் தனது மொபைலில் பதிவு செய்து கொண்டார். பின்னர் டெல்லியில் கடந்த ஏப்ரல் 2, 2026 அன்று என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து, உணவு தராமல் துன்புறுத்தினார். இதனால் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்கக் கூட முடியாமல் போனேன்.
மேலும், எங்களின் திருமணம் குறித்து இரு குடும்பத்தினரும் பேசியபோது, அபிஷேக் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியவந்தது. இதைப் பற்றி கேட்டதற்கு, அவர் தனது கூட்டாளிகள் மூலம் சமூக வலைதளங்களிலும், போனிலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்" என்று அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கல்கத்தா உயர்நீதிமன்றம், அபிஷேக் போரலை உடனடியாகக் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதைத் தடுப்பதற்காக, அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் மொபைல் போன்கள், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய மொக்ரா காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபிஷேக் போரல் மற்றும் அவரது கூட்டாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தீவிர முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் அரங்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக பல போட்டிகளில் ஆடிய அபிஷேக் போரல், இந்த பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

