ரோகித் போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. சிரித்துக்கொண்டே சிக்கிய ஆஸ்திரேலியா அணி.. இந்தியா தரமான கம்பேக்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றுவிடுமோ என இருந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா எடுத்த தைரியமான முடிவால் தப்பித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
170 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்துவிட்ட போதும் உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் ஜோடி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

ரன் வேட்டை
ஓப்பனிங் வீரர் உஸ்மான் கவாஜா ஒருபுறம் தூண் போல நிலைத்து நின்று 150 ரன்களுக்கும் மேலாக ரன்களை அடித்து வந்தார். மறுபுறம் அவருக்கு துணையாக நின்று அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் சதமடித்து அசத்தினார். இதனால் 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப் மட்டும் 200 ரன்களை தாண்டி சென்றது.

ரோகித்தின் திட்டம்
விக்கெட்டே விழாதா என ரசிகர்கள் காத்திருந்த போது தான் ரோகித் சர்மா மனரீதியான தாக்குதலை தொடங்கினார். 128வது ஓவரின் போது ஜடேஜா வீசிய பந்து கவாஜாவின் பேட்டில் படாமல் பேடில் பட்டு சென்றது. இதற்கு உடனடியாக எல்.பி.டபள்யூ கேட்டு இந்திய வீரர்கள் அனைவரும் கத்தினர். ஆனால் போட்டியை பார்த்த ரசிகர்களுக்கே அது நாட் அவுட் எனத்தெரியும்.

டி.ஆர்.எஸ் முடிவு
ஸ்டம்பிற்கு வெளியில் நீண்ட தூரத்திற்கு கவாஜா காலை எடுத்துவைத்துவிட்டார். இதனால் நிச்சயம் பந்து ஸ்டம்பில் பட்டிருக்காது. இப்படி இருக்கையில் டி.ஆர்.எஸ் எடுத்தார் ரோகித் சர்மா. நினைத்ததை போலவே அது நாட் அவுட் தான். அனைவரும் சிரித்துக்கொண்டே சென்றனர். ஆனால் அதனுடைய தாக்கம் தான் அடுத்த 2 ஓவர்களில் வெளிப்பட்டது.

சிக்கிய கிரீன்
எந்தவித பதற்றமும் இன்றி செட்டிலாக ஆடி வந்த கேமரூன் கிரீனுக்கு அந்த டி.ஆர்.எஸ் மனதளவில் பதற்றத்தை கொடுத்தது. இதனால் அடுத்த 2 ஓவர்களில் அவர் மிகவும் தடுமாறியது தெரிந்தது. எப்படியாவது அழுத்தத்தை குறைக்க பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற சூழலில் தான் அஸ்வின் அவரின் விக்கெட்டை எடுத்தார். இதன் பின்னர் அலெக்ஸ் கேரி 0, ஸ்டார்க் 7 என அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது.


Click it and Unblock the Notifications