அபுதாபி: இன்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் கேமரூன் கிரீன். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 25.20 கோடிகளுக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்படி இருக்கும்போது இவருக்கு கொல்கத்தா அணி ரூபாய் 18 கோடிகள் மட்டும் கொடுத்தால் போதும் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நடக்கவுள்ளது.
கேமரூன் கிரீன் இந்த மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். அப்போது அவரது மேனேஜர் கேமரூன் கிரீன் பெயரை பேட்ஸ்மேன்கள் வரிசையில் பதிவு செய்துவிட்டார். இதனால் இவரால் பந்து வீச முடியாதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதன் பின்னர் தன்னால் பந்தும் வீச முடியும். எனது மேலாளர் தவறுதலாக பதிவு செய்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். கிரீன் இவ்வாறு தெரிவித்ததும் இவர் மீது பல அணிகளின் கவனம் குவிந்தது.

கேமரூன் கிரீன்: தொடக்கத்தில் அமைதியாக இருந்த சென்னை அணி அதன் பின்னர் கொல்கத்தாவுடன் போட்டி போட்டது. ஆனால் கொல்கத்தா அணி அவரை ரூபாய் 25.20 கோடிகளுக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் இவரை கொல்கத்தா அணி இவ்வளவு தொகை கொடுத்து வாங்க காரணமே, கொல்கத்தா அணியில் வீரராக விடுவிக்கப்பட்டு, பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஸ்ஸலின் இடத்தை நிரப்புவதற்காக தான்.
18 கோடிதான்: இப்படி இருக்கும்போது கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு வாங்கி இருந்தாலும் இவருக்கு கொல்கத்தா அணி ரூபாய் 18 கோடிகள் மட்டும் கொடுத்தால் போதும். இதற்கு காரணம் ஐபிஎல் ஏல விதிமுறைகளில் பிசிசிஐ நிர்வாகம் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகள் தான். அதாவது, ஒரு வீரரை ரூபாய் 18 கோடிகளுக்கு மேல் எத்தனை கோடிகள் கொடுத்து வாங்கினாலும், அணி நிர்வாகம் வீரருக்கு ரூபாய் 18 கோடிகள் கொடுத்தால் போதுமானது. மீதித் தொகையை இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக செலவிட பயன்படுத்தப்படும் எனவும் அணிகளின் கணக்கில் இருந்து மொத்த தொகை கழிக்கப்படும் என்றும் அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.