சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், 2024 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எப்படி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து போராடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதோ, அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நம்பிக்கையுடன் களமிறங்கியது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏலத் தேர்வு என்பது விமர்சனத்திற்குரிய வகையில் இருந்தாலும், போட்டிகளில் அந்த அணி எப்படியோ வெற்றி பெற்றுவிடும், பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிவிடும். அதேபோல 2025 ஐபிஎல் தொடரிலும், அந்த அணி ஏலத்தில் நட்சத்திர வீரர்களை வாங்கவில்லை என்றாலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்திருந்தது.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். பின்னர் அவர் முழங்கை காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். பின்னர் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மேலும் மூன்று போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மொத்தமாக எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆறு லீக் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. அவை அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் 2024 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் போல நாங்கள் முன்னேறுவோம் என ஸ்டீபன் ஃப்ளெமிங் பேசியிருக்கிறார். ஆனால், 2024 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பல நல்ல வீரர்களை அணியில் வைத்திருந்தது. தினேஷ் கார்த்திக், விராட் கோலி, யாஷ் தயாள், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ் என பல வீரர்கள் பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தனர்.
எனினும் அந்த அணி முதல் ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. அதன் பிறகு மீண்டு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மீதமிருந்த ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று, மொத்தம் 14 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோல இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறுமா என்று கேட்டால் நிச்சயம் கேள்விக்குறிதான். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அந்த அணியின் பேட்டிங் வரிசை இன்னும் நிலையானதாக மாறவில்லை. பல பரிசோதனை முயற்சிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலையற்ற பேட்டிங் வரிசையால் சிஎஸ்கே அணி திண்டாடி வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நன்றாக ஆடினாலும், ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் கை கொடுக்காததால் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது.
மேலும் பந்துவீச்சில் நூர் அஹ்மத் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்துவீசுகிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டு வருகின்றனர். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி, ஆர்சிபி அணியைப் போல அடுத்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ஸ்டீபன் ஃப்ளெமிங் சொல்வது, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் சொன்ன விஷயமாகவே தெரிகிறது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த அணியும் மோசமாக விளையாடி வரும் அணிகளில் ஒன்று தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வீழ்த்தினால், ஸ்டீபன் ஃப்ளெமிங் சொன்னது போல, சிஎஸ்கே அணி மீதமுள்ள போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று விடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.
ஆனால், அதன் பிறகு சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளை சந்திக்க வேண்டி வரும். அப்போதும் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி உள்ளது. சிலர், சிஎஸ்கே மீதமுள்ள ஆறு போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் (மொத்தம் 4+10=14 புள்ளிகள்) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும் என்கிறார்கள். அதாவது மொத்தம் 14 புள்ளிகளை பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஏனெனில் தற்போது முதல் ஆறு இடங்களில் இருக்கும் அணிகள் இப்போதே 10 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன. அந்த அணிகள் எட்டு அல்லது ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், முதல் ஆறு இடங்களில் இருக்கும் மூன்று அணிகளுக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதமுள்ளன. மற்ற மூன்று அணிகளுக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளன. அவற்றில் அந்த அணிகள் எளிதாக மூன்று வெற்றிகளைப் பெற முடியும். அந்த வகையில், இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் நான்கு அணிகள் 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும் என்ற கணிப்பு உள்ளது. அப்படியே 14 புள்ளிகளைப் பெற்று ஒரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்றாலும், அதற்கு நெட் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும். தற்போது இருக்கும் 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் ரன் ரேட் தான் மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த மோசமான சரிவிலிருந்து முன்னேறி வந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமே.