சென்னை: 2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து பலத்த அடிகள் விழுந்து வருகின்றன. அந்த அணியின் ஜாம்பவான் தோனி ஏப்ரல் மாதம் இறுதி வரை விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தோனி, பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 6 போட்டிகளைத் தவறவிட உள்ளார். ஏப்ரல் மாதம் இறுதி வரை அவர் தீவிர சிகிச்சையில் இருப்பார் என்பதால், அவர் இல்லாமல் சிஎஸ்கே எப்படிச் செயல்படப் போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. தோனி தற்போது சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தோனி இல்லாதது ஒருபுறம் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, அந்த அணியின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸும் காயமடைந்துள்ளார். இது சிஎஸ்கே அணிக்குத் தோனி இல்லாததை விடப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், நடுவரிசையில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கும் வல்லமை கொண்டவர். அவர் இல்லாதது சிஎஸ்கே-வின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.
தோனி மற்றும் பிரெவிஸ் ஆகிய இரு முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வந்த சஞ்சு சாம்சன், விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பதுடன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே-வின் டாப் ஆர்டரில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
அதேபோல், அதிக விலைக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய இருவருக்கும் இந்த முறை மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாகக் கருதப்படும் பிரசாந்த் வீர் மற்றும் அதிரடி வீரர் கார்த்திக் சர்மா ஆகியோர் 'பினிஷர்' வேலையைச் செய்ய உள்ளனர்.
சிஎஸ்கே உத்தேச அணி: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், மாட் ஹென்றி, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ்.

கவுகாத்தியில் திங்கள்கிழமை (இன்று) நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே இந்த புதிய மாற்றங்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மற்றும் பிரெவிஸ் இல்லாத இந்தச் சூழலை ருதுராஜ் தலைமையிலான படை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.