ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் சராசரி பேட்டிங் ஸ்கோரே 300 ரன்களாக உள்ளது. அதேபோல் முதல் நாளில் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசுவதற்கு நன்றாக இருக்கும் எனவும், பின்னர் ஆடுகளத்தில் தொய்வு ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது. கடைசி இரு நாட்களில் மட்டுமே ஸ்பின்னர்களால் விக்கெட்டை வேட்டையாட முடியும் என்று தெரிய வருகிறது. இதனால் டாஸை வெல்லும் அணி நிச்சயம் பேட்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் இந்திய அணியை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே, இஷான் கிஷன், ஜடேஜா, அஸ்வின், உனாத்கட், சிராஜ் ஆகியோரில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சைனி அல்லது முகேஷ் குமார் இருவரில் யாராவது ஒருவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் உனாத்கட் பாணியிலான பந்துவீச்சு முறையையே முகேஷ் குமார் கொண்டுள்ளதால், அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பார்க்கப்படுகிறது.
நேற்று ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறியிருந்தார். இதனால் ஒரேயொரு இடத்திற்கு மட்டும் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருந்தும் ஷர்துல் தாக்கூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவரை நீக்கும் வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளாது என்றும் பார்க்கப்படுகிறது.