மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அவர் எப்படி அணியில் இடம்பெற்றிருக்கும் மூத்த வீரர்களைச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில்லை விட அனுபவ வீரர்களாக மூன்று வீரர்கள் இருக்கிறார்கள் - கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா. இவர்கள் சுப்மன் கில்லை விட அதிக அனுபவம் உடையவர்கள், அதிக ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை அளிக்கலாம், அதற்கான தகுதியும் உள்ளது.

குறிப்பாக, கே.எல். ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அதற்கு மிகவும் தகுதியானவர்கள். இதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர்கள் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதெல்லாம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சுப்மன் கில் தோனியாக மாற முடியாது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில், தோனி இந்திய அணியின் கேப்டனாக இளம் வயதில் நியமிக்கப்பட்டபோது, அணியில் மாபெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருந்தனர்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தோனிக்கு மூத்த வீரர்களாக இருந்தனர். அவரை விட அதிக போட்டிகளில் விளையாடி, அதிக சாதனைகளையும் செய்திருந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தோனி தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
சில விமர்சனங்கள் இருந்தாலும், தோனி அனைத்தையும் லாவகமாக கையாண்டார். அதற்கு முன் இருந்ததை விட இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். அப்போது பிசிசிஐ உட்பட இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரும் அரசியல் நடந்து வந்தது. அவற்றையும் சமாளித்தார். ஆனால் இன்று அந்த அளவுக்கான அரசியல் பிசிசிஐ-யில் நிலவவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.
இப்படிப்பட்ட நிலையிலும், சுப்மன் கில்லால் இந்த மூன்று மூத்த வீரர்களை எப்படி கையாள முடியும்? அவர்களை விட சுப்மன் கில்லின் ஆளுமை அதிகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓய்வறையில் மூத்த வீரர்களுக்கு முன், சுப்மன் கில் ஒரு கேப்டனாகத் தனது ஆளுமையை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றன்ர்.
மறுபுறம், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இளம் வீரரான சுப்மன் கில்லைக் கேப்டனாக நியமிக்கிறார் என்ற ஒரு பேச்சும் உள்ளது. இதன் காரணமாகவே, சுப்மன் கில் தோனியாக மாற முடியாது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.