கொச்சி: 2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து வெறியாட்டம் ஆடி மிரட்டி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் அவர் அடித்த நோ லுக் ஷாட், சுப்மன் கில்லுக்கு சவால் விடுவது போல இருந்தது.
தலையைக் குனிந்தபடியே பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விடுவது... அடித்த பிறகுதான் பந்து எங்கே போனது என்று நிமிர்ந்து பார்ப்பது... கிரிக்கெட் உலகில் 'நோ-லுக்' ஷாட்கள் எப்போதும் ஸ்பெஷல். அப்படி ஒரு மாயாஜால ஷாட்டால், கேரள கிரிக்கெட் லீக் தொடரையே அதிர வைத்திருக்கிறார் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். அவரது இந்த ஆட்டம், ஆசியக் கோப்பைக்கு முன் இந்திய அணி நிர்வாகத்திற்கு, "நான் பிளேயிங் லெவனில் ஆட வேண்டும்" செய்தியை அனுப்பியுள்ளது.

கேரள கிரிக்கெட் லீக் தொடரில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 41 பந்துகளைச் சந்தித்த அவர், 9 விண்ணை முட்டும் சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 83 ரன்களைக் குவித்து மிரட்டினார்.
இந்த இன்னிங்ஸின் ஹைலைட்டே அவர் அடித்த 'நோ-லுக்' சிக்ஸர்தான். பந்து பேட்டில் பட்டதும் தலையைக் குனிந்துகொண்டே ஷாட்டை முழுமையாக நிறைவு செய்த அவர், பந்து சிக்ஸருக்குப் போனதை நிதானமாக நிமிர்ந்து பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, 'சுப்மன் கில் நினைத்தால் கூட இப்படி ஒரு ஸ்டைலான ஷாட்டை ஆட முடியுமா?' என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தத் தொடரில் இது சாம்சனின் தொடர்ச்சியான நான்காவது 50+ ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 121(51), 89(46), 62(37) என ரன் மழை பொழிந்து, 5 இன்னிங்ஸ்களில் 368 ரன்களைக் குவித்து, தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் இந்த மிரட்டல் ஃபார்ம், இந்திய அணி நிர்வாகத்திற்கு, குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஒரு வலிமையான செய்தியை அனுப்பியுள்ளது. தொடக்க வீரருக்கான இடத்திற்கு அணியில் கடும் போட்டி நிலவுகிறது. டெஸ்ட் கேப்டனும், அணியின் துணை கேப்டனுமான சுப்மன் கில் அந்த இடத்திற்குப் போட்டியாக இருப்பதால், சாம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்நிலையில், தனது அதிரடி மூலம் தனக்கான இடத்தை உறுதி செய்யப் போராடுகிறார் சாம்சன்.
இந்த அதிரடி ஆட்டம், ஐபிஎல் அணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து அவர் வெளியேற விரும்புவதாக வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அவரைக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, சஞ்சு சாம்சனின் பேட் தற்போது நெருப்பைப் பற்றவைத்துள்ளது மட்டும் உண்மை.