மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் விராட் கோலி மிக மோசமாக ஆடி இருக்கிறார். முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்யலாம் என விளையாடியது இந்திய அணி. இந்த நிலையில் விராட் கோலி 29 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டம் இழந்தார்.

அதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து மீண்டும் விமர்சனம் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலிக்கு 36 வயது மட்டுமே ஆகிறது. அவர் 2019 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டியில் உலகிலேயே நம்பர் 1 வீரராக இருந்தார்.
2015 முதல் 2019 வரை தற்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக பாராட்டுக்களை பெற்று வரும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட சிறப்பாக விளையாடி வந்தார் விராட் கோலி. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது.
விராட் கோலி 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 67 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 2005 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 31 என்பதாகவே உள்ளது. வேறு எந்த ஒரு வீரருக்கும் இத்தனை ஆண்டுகளுக்கு சராசரியாக 31 ரன் எடுத்தும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்காது.
உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூட இத்தனை ஆண்டுகளுக்கு ஃபார்ம் அவுட் ஆனதில்லை. சச்சின் தனது 39 வது வயதில் ஓய்வு பெற்றார். அவர் 2013 ஆவது ஆண்டில் ஓய்வு பெற்றார். அதற்கு முன் 2011 ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே அவரது டெஸ்ட் ஃபார்ம் சற்று மோசம் அடைந்திருந்தது.
அதை உணர்ந்து அவர் 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மூன்று ஆண்டுகளில் அவர் 41 இன்னிங்ஸ்களில் 1389 ரன்கள் சேர்த்து இருந்தார். அதன் சராசரி 35.60 ஆகும். அந்த 41 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரை சதங்களை அடித்து இருந்தார் சச்சின்.
ஆனால், சச்சின் டெண்டுல்கரை விட நீண்ட காலத்திற்கு விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆக இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு இனியும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்திய ரசிகர்களும் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கை பார்த்து சோர்வு அடைந்து விட்டனர். 36 வயதில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. அவர் மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஆட விரும்பினால் நிச்சயம் ரஞ்சி ட்ராபி போன்ற உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடி தனது ஃபார்மை மீட்க வேண்டும்.
மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மாவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதோடு, அவரது வயது 38-ஐ தொட்டு விட்டதால் அவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.