மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி செய்த செயலுக்காக அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை செய்யுமா? ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவரால் ஆட முடியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகள் என்ன சொல்கிறது? என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் இடையே மோதல் சம்பவம் நடந்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது பத்தாவது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ வேண்டும் என்றே இடித்தார் விராட் கோலி.

அப்போது சாம் கோன்ஸ்டாஸ் பிட்ச்சின் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். விராட் கோலி அவரை பார்க்காதது போல சென்று, வேண்டுமென்றே அவரை தனது தோள் பட்டையின் மூலம் இடித்தார். அதன் பின் இருவரும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அம்பயர் மற்றும் சக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
விராட் கோலி செய்தது தான் தவறு என்பது ரீப்ளேவில் பார்க்கப்பட்ட போது தெளிவாக தெரிந்தது. அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச போட்டியில் ஒரு வீரர் மற்றொரு வீரருடன் வேண்டுமென்றே உடல் ரீதியாக தொடர்பு கொண்டால், அது இரண்டாம் நிலை குற்றம் ஆகும். எம்சிசி (மேரில்போன் கிரிக்கெட் கிளப்) விதிப்படி 42.1 என்ற பகுதியில் இது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீரர் மற்றொரு வீரருடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டு இந்த விதியை மீறி இருந்தால் அம்பயர்கள் இது பற்றி புகார் அளிக்க வேண்டும். அதன் பின்னர் மேட்ச் ரெப்ரீ இறுதி முடிவை எடுப்பார். தற்போது விராட் கோலி செய்துள்ள சம்பவத்தில் அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெப்ரீ எடுக்கும் முடிவே முக்கியமானதாகும்.
அவர்கள் விராட் கோலி தவறு செய்ததாக நினைத்தால் இரண்டாம் நிலை தவறு செய்ததற்காக, அவருக்கு மூன்று முதல் நான்கு டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வீரர் மூன்று டீமெரிட் புள்ளிகள் பெற்றால் ஒரு சஸ்பென்ஷன் புள்ளியும், போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதே சமயம் நான்கு டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால் இரண்டு சஸ்பென்ஷன் புள்ளிகள் வழங்கப்படும். அப்படி நடந்தால் போட்டியில் ஆட தடை விதிக்கப்படலாம். விராட் கோலிக்கு நான்கு டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால் அவர் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும்.
எனவே, விராட் கோலிக்கு நான்கு டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போகலாம். அதேசமயம் விராட் கோலி அம்பயரின் முடிவுக்கு எதிராக மறுவிசாரணை கோரலாம். அப்படி நடந்தால் அவர் சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியில் விளையாட முடியும். மறுவிசாரணை முடிந்து கிடைக்கும் முடிவை பொறுத்து அவரது தடை அமையும். எனவே, விராட் கோலி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.