பிரியாணி ஆர்டரை கேன்சல் பண்ணுங்கப்பா.. காரத்தை இப்போ அவங்களால தாங்க முடியாது
துபாய் : நேற்றைய ஐபிஎல் 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் அணி கலாய்த்து டிவீட் செய்துள்ளது.

துபாயில் நடைபெற்ற போட்டி
ஐபிஎல்லின் 40வது போட்டி நேற்றைய தினம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. சாம்சன் 36 ரன்களை எடுத்த நிலையில், ஸ்மித் 19 ரன்களையும் பராக் 20 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.

18.1 ஓவர்களில் வெற்றி
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்களை குவிக்க, விஜய் சங்கர் 51 பந்துகளில் 52 ரன்களை அடித்து அதகளம் செய்தார். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 140 ரன்களை குவித்தது. இதையடுத்து 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை அடித்து வெற்றிவாகை சூடியது.

ராஜஸ்தான் செய்த பிரியாணி ஆர்டர்
இந்த போட்டியை அடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் கருணையே இல்லாமல் கலாய்த்துள்ளது. முன்னதாக உலக பிரியாணி தினத்தையொட்டி பெரிய ஐதராபாத் பிரியாணிக்கு ஆர்டர் கொடுப்பதாக அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

பருப்பு உணவு போதும்
இதை வைத்து அவர்களை கலாய்த்திருந்தது சன்ரைசர்ஸ். பிரியாணி ஆர்டரை கேன்சல் செய்யுமாறும், தற்போதைய சூழலில் அந்த காரத்தை அவர்களால் தாங்க முடியாது என்றும் டிவிட்டரில் தெரிவித்துள்ளது சன்ரைசர்ஸ். மேலும் தற்போது அவர்களுக்கு பருப்பு உணவு மட்டுமே போதுமானது என்றும் தொடர்ந்த கலாய்த்திருந்தது.


Click it and Unblock the Notifications