கொல்கத்தா: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் களமிறங்க ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 8வது முறையாக ஆஸ்திரேலியா அணி தகுதிபெற்றுள்ளது. நவ.19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலியா அணிக்கு இது தொடர்ச்சியாக 8வது வெற்றியாகும். இதனால் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் அரையிறுதி வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், ஓய்வறையில் அமர்ந்திருப்பதை விடவும் களமிறங்கி விளையாடியது எளிதாகவே இருந்தது. ஏனென்றால் 2 மணி நேரமாக பதற்றத்தை கட்டுப்படுத்தி போராடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் விரைவாக அட்டாக்கில் கொண்டு வருவேன் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் ஆடுகளத்தில் ஸ்பின்னுக்கு உதவி இருக்கும் என்று தெரியும்.
ஆனால் மேகமூட்டம் இருந்ததால், நாங்கள் முதலில் பவுலிங் செய்ய வேண்டும் என்பதை ஏமாற்றமாக பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் அணியின் ஃபீல்டிங் பற்றி தொடர்ந்து பேசி வந்தோம். ஏனென்றால் உலகக்கோப்பையின் தொடக்கத்தில் எங்கள் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால் இன்று ஃபீல்டிங் தான் மிரட்டலாக அமைந்தது,. குறிப்பாக 37 வயதில் டேவிட் வார்னர் பாய்ந்து பாய்ந்து பந்தை பிடித்தார். டிராவிஸ் ஹெட் தான் ஒன்றைய நாளின் நாயகன். ஏனென்றால் ரன்கள் சேர்த்ததோடு, மிடில் ஓவர்களில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இங்லிஸ் சிறப்பாக பேட்டிங் செய்து எல்லை வரை கொண்டு வந்தார். ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்கள் ஏற்கனவே 2015 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறோம். அகமதாபாத் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் முழுமையாக நிரம்பி இந்திய அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள். நிச்சயம் அதனை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது கிரிக்கெட் வாழ்வின் உச்சமாக இருந்தது. தற்போது மீண்டும் ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.