கோஹ்லி- கும்ப்ளே.. போன் வயரு பிஞ்சு போயி 6 மாசமாச்சாம்!
டெல்லி: அனில் கும்ப்ளேவுக்கும், விராத் கோஹ்லிக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே பேச்சு வார்த்தை நின்று போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானிடம் இந்திய அணி படுகேவலமாக தோல்வி அடைந்ததை காட்டிலும் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருவது கோஹ்லி- கும்ப்ளே மோதல்தான். அந்த அளவுக்கு அவர்களது மோதல் முற்றியுள்ளது.
இந்த மோதல் குறித்து பிசிசிஐயைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகி கூறியுள்ள தகவல்கள்: கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் போட்டியின்போதுதான் கும்ப்ளேவும், கோஹ்லியும் கடைசியாக பேசி கொண்டனர்.

6 மாதங்கள் ஆச்சு
இருவரும் 6 மாதங்களாக பேசிக் கொள்ளவே இல்லை. கும்ப்ளேவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக தலைமை ஆலோசனை குழுவை (சிஏசி) சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் முடிவெடுத்தபோது கூட நிபந்தனையுடன்தான் அதைச் செய்தனர்.

பிரச்சினையைத் தீர்க்க கோரிக்கை
கும்ப்ளேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் முடிவை எடுத்தபோது, விரைவில் கோஹ்லியுடனான பிரச்சினையை சரி செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை முடித்தவுடன் கும்ப்ளே விவகாரம் தொடர்பாக இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் மூன்று முறை தனித்தனியே ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

முதலில் நடந்த ஆலோசனை
பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகளையும், சிஏசி உறுப்பினர்களையும் முதலில் கும்ப்ளே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கோஹ்லி சந்தித்தார். கடைசியாக நடந்த கூட்டத்தில இருவரும் வந்தனர். அப்போது இருவரும் பேசிக் கொள்ளாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விராத்துடன் பிரச்சினை இல்லை
லண்டனில் இறுதிப் போட்டி நடைபெற்றவுடன் ஏதாவது பிரச்சினையா என்று கும்ப்ளேவிடம் பிசிசிஐ அதிகாரிகள் தனியாக கேட்டனர். அதற்கு அவர் விராத்துடன் எந்த பிரச்சினையும் இல்லை என்றார். எனினும் சில முக்கியமான இடங்களில் தனது செயல்பாட்டுக்கு கோஹ்லி கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிவித்தார்.

அதிகார வரம்பு
தனது வரம்புக்குள் அனில் கும்ப்ளே ஊடுருவுவதாக கோஹ்லி நினைத்தார். அனிலை பொருத்தவரை பயிற்சியாளருக்கென்று என்னதான் யோசனைகள், ஆலோசனைகள் இருந்தாலும், அதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கேப்டன்தான், அது தனது இறுதி முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் என்றுதான் அவர் கருதினார் என்று கூறியுள்ளார் அந்த நிர்வாகி.


Click it and Unblock the Notifications