ராஞ்சி: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸை சந்தித்து பேசியுள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா கமிட்டி. மேலும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸை நேற்று சந்தித்து அரை மணிநேரம் பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது தாஸ், டோணிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.
டோணி விளையாட்டுத்துறை பற்றி முதல்வர் தாஸிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டில் இருந்து டோணி சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். அந்த அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ரகுபர் தாஸ் டோணிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசியல்வாதி மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் உண்டு. நாங்கள் எப்படி அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியாதோ அதே போன்று தான் விளையாட்டு வீரர்களால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.