
3 போட்டிகளில் தோல்வி
ஐபிஎல் போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல்லில் வலிமையான அணியாக திகழும் சிஎஸ்கே இந்த முறை மிகுந்த தடுமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
தொடர்ந்து அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே, ஐபிஎல் பட்டியலில் இறுதியில் உள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அடுத்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ள நிலையில், அந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

மஞ்ச்ரேகர் அறிவுறுத்தல்
இந்நிலையில் சிஎஸ்கேவை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல சில அதிரடி முடிவுகளை கேப்டன் தோனி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். எப்போதும் நல்ல பார்மில் உள்ள ஆர்டரை மாற்றுவது தோனியின் வழக்கமல்ல என்று தெரிவித்துள்ள மஞ்ச்ரேகர், ஆனால், தற்போதைய சூழலில் அவர் தன்னை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

கைகொடுக்காத மாற்றம்
அணியில் பௌலர்களின் தேவை உள்ளதை தோனி உணர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதில் ஜடேஜாவும் ஒருவர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் ராயுடு, பிராவோ சிறப்பான மாற்றத்தை கொண்டுவருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் கைகொடுக்கவில்லை.

வெற்றிக்கு தேவை
தோனி தன்னுடைய வழக்கமான கொள்கைகளை விட்டுவிட்டு விராட் கோலி போன்று சில அதிரடி மாற்றங்களை அணியில் கொண்டுவருவதன்மூலம் வெற்றிப்பாதையில் அணியை வழிநடத்த முடியும் என்று மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். பீல்டிங், பௌலிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தஹிர் சிறப்பாக செயல்படுவார்
பிராவோ, வாட்சன் ஆகியோருக்கு ஓய்வளித்துவிட்டு அவர்களுக்கு பதிலாக இம்ரான் தஹிருக்கு அணியில் வாய்ப்பளிக்கலாம் என்றும் மஞ்ச்ரேகர் அறிவுறுத்தியுள்ளார். பிராவோவை விட தஹிர் சிறப்பாக செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











