
வேகம் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள்
கடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கம் என்பதால், கும்ப்ளே அல்லது ஹர்பஜன் சிங்கை வைத்து கடைசி ஓவர்களை வீச வைத்த கங்குலி அணி இப்போது இல்லை. கடைசி ஓவரில் 10 ரன்கள்தான் எடுக்க வேண்டும் என்றாலும் அதையும் தனது யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்துகளால் தடுத்து நிறுத்தும் திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர்குமார் போன்றோரை பெற்றுள்ளது இந்திய அணி.

ஸ்பின்னர்களும் டாப்
ஸ்பின்னுக்கு பெயர் பெற்ற இந்தியா அந்த திறமையையும் விட்டுக்கொடுக்கவில்லை. அஷ்வினையே வெளியே வைத்திருக்கும் அளவுக்கு ஸ்பின்னர்களிடம் கொட்டிக் கிடக்கிறது திறமை. நேற்று சஹல் வீசிய 10 ஓவர்களும் அதற்கு முத்தான சாட்சி. நியூசிலாந்தை நகரவிடாமல் கட்டிப்போட்டது அவரது பந்து வீச்சு.

பேட்டிங் சூப்பர்
இந்தியா எப்போதுமே திறமையான பேட்ஸ்மேன்களை உருவாக்கி தந்துள்ளது. இது பேட்டிங் பூமி. கவாஸ்கர், சச்சின், கோஹ்லி என்ற வரிசையோடு நிற்காமல், ரோகித் ஷர்மா, பாண்ட்யா, டோணி என்று நீளுகிறது பேட்டிங் வரிசை. முன்பெல்லாம் கடமைக்கு வந்து பேட் பிடித்த பவுலர்கள் கூட இப்போது பட்டையை கிளப்புகிறார்கள். புவனேஸ்வர்குமாரின் அதிரடிகள் அதற்கு சான்று. செஞ்சுரி போடும் திறமை அஸ்வினுக்கும் உண்டு.

ஃபீல்டிங் அற்புதம்
இந்திய அணியின், ஆகப்பெரிய பின்னடைவான ஃபீல்டிங் இப்போது முழுக்க களையப்பெற்றுள்ளது. உலகின் முன்னணி ஃபீல்டிங் அணி இந்தியாதான் என்று நாம் இப்போது காலரை தூக்கிவிடுவோம் என்று 10 வருடத்திற்கு முன்பு கூட யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ராபின் சிங் தொடங்கி வைக்க, யுவராஜ், கைஃப் அதை மேலும் மெருகேற்ற, இப்போது ஜடேஜா, கோஹ்லி, பாண்ட்யா, மனிஷ் பாண்டே முதல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஜான்டி ரோட்ஸ் உள்ளனர்.

தொடர் வெற்றிகள்
இந்த ஆல்ரவுண்ட் ஃபெர்பார்மன்சுக்காகத்தான், இந்திய அணி அடித்து தூள் கிளப்புகிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், தொடர்ச்சியாக 7 இரு நாட்டு கிரிக்கெட் தொடர்களை வென்ற சாதனையை படைத்துள்ளது. 2015ல் இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் வென்றது. அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற எந்த இரு நாட்டு தொடரிலும் இந்தியா தோற்கவில்லை.

தொடர்ந்து ராஜா
ஜிம்பாப்வேக்கு எதிராக 5-0 என்று வெற்றிக் கணக்கு துவங்கியது. 5-0 என்று இலங்கையை வொய்ட் வாஷ் செய்தோம். இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என்றும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3-1 என்றும் இலங்கைக்கு எதிராக 5-0 என்றும், ஆஸி.க்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. நேற்றைய வெற்றி 7வது தொடர் வெற்றி. இதன் மூலம், சொந்த மண்ணில் கடந்த 2 வருடங்களாக ஒரு தொடரையுமே இந்தியா இழக்கவில்லை.


Click it and Unblock the Notifications