கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் சோம்பேறித்தனமான செயல்பாடு கேப்டன் ரிஷப் பண்ட்டை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மைதானத்திலேயே குல்தீப்பை பண்ட் கடுமையாக எச்சரித்த சம்பவம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குல்தீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி அனைத்து துறைகளிலும் சொதப்பி வருகிறது. பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தத் திணற, பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தடுமாற என அணி இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த டென்ஷனுக்கு மத்தியில், குல்தீப் யாதவின் செயல்பாடு கேப்டன் ரிஷப் பண்ட்டை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸின் 48-வது ஓவரை வீச வந்தார் குல்தீப் யாதவ். ஓவரைத் தொடங்குவதற்கு முன், அவர் மெதுவாக 'ஃபீல்டிங்கை' செட் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே ஐசிசியின் புதிய 'ஸ்டாப்-கிளாக்' (Stop-Clock) விதிப்படி, மெதுவாக ஓவர்களை வீசியதற்காக இந்தியாவுக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் கோபமடைந்த ரிஷப் பண்ட், ஸ்டம்ப் மைக்கில், "முதல் பந்தை சீக்கிரம் போடு.. இப்படி செய்யாதே.. திரும்பத் திரும்ப நான் இதை சொல்ல மாட்டேன்" என்று இந்தியில் கத்தினார்.
ஐசிசியின் புதிய விதியின்படி, ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீச பந்துவீசும் அணி தயாராக இருக்க வேண்டும். இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். மூன்றாவது முறையாகவும் தாமதம் செய்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.
அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாகப் பேசினார். "ரிஷப் பண்ட் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் கேட்க முடிகிறது. இது மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம். ஒரு பந்துவீச்சாளராக, உங்கள் ஃபீல்டிங் எங்கே நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு பந்துக்கும் சைகை காட்டி ஃபீல்டர்களை நகர்த்திக் கொண்டிருக்கக் கூடாது. கேப்டன் ரிஷப் பண்ட் சொல்வது முற்றிலும் சரி" என்று குல்தீப்பை விமர்சித்தார்.
குல்தீப் யாதவை ரிஷப் பண்ட் இப்படி எச்சரிப்பது இது முதல் முறையல்ல. இந்தப் போட்டியின் முதல் நாளிலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அப்போது பண்ட், "30 செகண்ட் டைமர் ஓடுது.. வீட்லயா விளையாடிட்டு இருக்க? சீக்கிரம் ஒரு பந்தைப் போடு" என்று கூறினார்.
மற்றொரு முறை, "குல்தீப், இரண்டு முறை வார்னிங் வாங்கிட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டை காமெடி ஆக்கிவிடாதே?" என்றும் பண்ட் கடுமையாகக் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்திய அணி ஏற்கனவே போட்டியில் படுமோசமான நிலையில் இருக்கும்போது, குல்தீப் யாதவின் இத்தகைய மெத்தனமான செயல்பாடு அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.