கடினமான இலக்கு
இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் இஷான் கிஷான் 48 பந்துகளில் 76 ரன்களும், ருதுராஜ் கெயிக்வாட் 15 பந்துகளில் 23 ரன்களும் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 36 ரன்களை அடிக்க, இந்திய அணி பலமான நிலைக்கு சென்றது. கடைசி சில ஓவர்களில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் (29), ஹர்திக் பாண்ட்யா (31) நல்ல இலக்கை வைக்க உதவினர்.
திணறிய தென்னாப்பிரிக்கா
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி எப்படியும் தோற்றுவிடும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. டிக்காக் (22), தெம்பா பவுமா (10), டுவைன் பிரிட்டோரியஸ் (29) என வெளியேறியதால் 81 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் வெற்றியும் கிட்டதட்ட உறுதியானது.
திடீர் திருப்பம்
ஆனால் இதன்பின்னர் ஜோடி சேர்ந்த வாண்டர்டுசன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி தான் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வாண்டர் டுசன் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும் விளாசினார். இதனால் 191. ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் அடித்து வெற்றி கண்டது.
ரிஷப் பண்ட் பேச்சு
இந்நிலையில் இத்தனை ரன்கள் அடித்தும் தோற்றது ஏன் குறித்து ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிக்கு தேவையான ரன்களை குவித்தோம். ஆனால் திட்டத்தை செயலாற்றியதில் சொதப்பிவிட்டோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஸ்லோயர் பந்துகள் விக்கெட்களை எடுத்தன. பந்து பேட்டிற்கு பெரிதாக வரவில்லை. ஆனால் 2வது இன்னிங்ஸில் மொத்தமாக பேட்டிங்கிற்கு சாதகமானது. இங்கு தான் தோற்றோம்.
அது சரியாக இருந்தது
இதே போல எதிரணி வீரர் சிறப்பாக செயல்பட்டதை மறுக்கவே முடியாது. டேவிட் மில்லர் மற்றும் ராசி வாண்டர் டுசன் ஆகியோர் நல்ல பேட்டிங் செய்தனர். எங்களின் இலக்கு சரியாக தான் இருந்தது. அடுத்த முறை இதே போன்ற ஒரு சூழல் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ரிஷப் பண்ட் நம்பிக்கை தெரிவித்தார்.