ஹைதராபாத்:மைதானத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க விடாமல் ரசிகருக்கு தொல்லை கொடுத்த தெலுங்கு டிவி நடிகை உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
உப்பல் விளையாட்டு மைதானத்தில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியை தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்ளிட்டோர் பார்க்க சென்றுள்ளனர்.
ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்ததால் ஆர்வ மிகுதியால் அவர்கள் அனைவரும் துளளிக்குதித்து கொண்டாடி இருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர் போட்டியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
அந்த ரசிகரிடம் பிரஷாந்தி உள்ளிட்டோர் அருவருக்கத்தக்க வகையில் மோசமாக பேசி மிரட்டியதாக தெரிகிறது. அந்த சம்பவத்தை ரசிகர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார். ஆட்டத்தை காண விடாமல் இடையூறாக இருந்ததாகவும், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, ஐபிசி பிரிவு 341, 188, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். புகாரின் பேரில், நடிகை உட்பட 6 பேர் மீது விசாரிக்க இருக்கின்றனர்.