CCL 2026: கடைசி ஓவரில் 18 ரன்கள்.. 3 சிக்சர் அடித்த பெங்கால்.. அரையிறுதியில் கேரள மாலிவுட் தோல்வி
கோவை: CCL 2026 பன்னிரண்டாவது சீசனின் லீக் போட்டிகள் அனல் பறக்க நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் பெங்கால் டைகர்ஸ் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது.
டாசில் வெற்றி பெற்ற பெங்கால் டைகர்ஸ் அணி கேப்டன் ஜிஷ்ஷு செங்குப்தா முதலில் பந்துவீச முடிவு செய்தார். கேரள அணி கேப்டன் உன்னி முகுந்தன் 41 ரன்களும், அர்ஜுன் அரை சதம் அடித்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

இருவரும் இணைந்து 70 ரன்கள் குவித்தனர். பெங்கால் டைகர்ஸ் அணியின் ஜாம்மி, ஒரே ஓவரில் ஜீன் லால் உட்பட அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், அர்ஜுன் தனது அரை சதத்தை எட்டிய பிறகு அவுட் ஆனார்.
178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்கால் டைகர்ஸ், தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் இந்திராஷிஷ், உன்னி முகுந்தன் பந்தில் கோல்டன் டக் ஆனார். ஜாய் முகர்ஜி 18 ரன்களும்,, யூசுப் சிஷ்டி 8 ரன்களும் சேர்த்தபோதும், பெங்கால் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஜாம்மி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் அரை சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் மஜூம்தார் களத்தில் இருந்தார். இறுதி ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு பெங்கால் டைகர்ஸுக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைத் தேடித் தந்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்கால் டைகர்ஸ் அணி CCL 2026 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி ஞாயிற்றுகிழமை கோவையில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications